Archives: பிப்ரவரி 2022

மகிழ்ச்சியை தெரிந்துகொள்ளுதல்

எழுத்தாளர் மார்லின் மக்என்டயர், தன் தோழியிடமிருந்து "மகிழ்ச்சியாயிருப்பதே பொறாமைக்கு எதிரானது" என்பதை தான் கற்றுக்கொண்ட விதத்தை பகிர்கிறார். இந்த தோழி மாற்றுத் திறனாளியாக, நெடுநாளாய் பல வலிகளோடு இருந்தவர், அவருடைய திறமைகளை அவர் விரும்பிய வகையில் வளர்த்திக்கொள்ள முடியாமல் அவர் உடல்நிலை அவர் திறன்களை மட்டுப்படுத்தியது. இருந்தபோதிலும், அவர் எப்படியோ தனித்துவமாக சந்தோஷத்தை அனுபவித்து மற்றவர்களோடும் மகிழ்ந்தார். அவர் மரிக்கும் முன்னர், தான் எதிர்கொண்ட ஒவ்வொன்றையும் பாராட்டி மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.

"பொறாமைக்கு எதிர்மறையானது மகிழ்ச்சியாய் இருப்பது" இந்த புரிந்துகொள்ளுதல், எனக்குள் நீட்டித்திருக்கிறது. என் வாழ்விலும் இருக்கும் சில நண்பர்களை எனக்கு நினைவூட்டுகிறது. அவர்கள் தங்களை யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காமல், மற்றவர்களுக்காக ஆழமாகவும், உண்மையாகவும் மகிழ்ச்சி கொள்பவர்களாய் ​வாழ்கின்றனர்.

பொறாமை என்பது சுலபமாய் சிக்கிக் கொள்ளக்கூடிய வலை. அது நம்முடைய ஆழமான பாதிப்புகளையும், காயங்களையும், மற்றும் பயங்களையும் பயன்படுத்தி நாம் இப்படி இருந்தால் நமக்கு கஷ்டங்கள் இருக்காது, நாம் கவலைப்பட வேண்டியிருக்காது என்று நம்மோடு கிசுகிசுத்து கொண்டே இருக்கும்.

பேதுரு, புதிய விசுவாசிகளுக்கு 1பேதுரு 2இல் நினைப்பூட்டியது போல, பொறாமை நமக்கு சொல்லும் பொய்களிலிருந்து விடுபட இருக்கும் ஒரே வழி, சத்தியத்தில் ஆழமாக வேரூன்றுவது தான். எப்படியெனில், கர்த்தர் தயையுள்ளவர் என்பதை ஆழமாக ருசிப்பது; அதாவது ஆழமாக அனுபவிப்பது (வ.1-3). நாம் "சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்பு" கூரமுடியும் (1:22) எப்பொழுதெனில் ,"என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான" (1:23) தேவவசனமே நமது சந்தோஷத்தின் மெய்யான ஆதாரம் என்று நாம் அறிந்துகொள்ளும்.

நாம் உண்மையாகவே தெரிந்துகொள்ளப்பட்ட சநததியினராய், அவருக்குச் சொந்தமான ஜனமாயும், அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைக்க பட்டவர்களாயும் (2:9) இருக்கிறோம் என்பதை நாம் நினைவுகூரும்போது, மற்றவர்களோடு ஓப்பிடுவதை விட்டுவிடுவோம்.

நற்செய்தியின் மகிழ்ச்சி

1964 ஆம் ஆண்டு ஒரு மாலையில், மகா அலாஸ்க்காவின் நிலநடுக்கம், நான்கு நிமிடங்களுக்கு மேலாக நீடித்து, 9.2 அளவு பதிவாகி, அனைத்தையும் அசைத்தும், உதிர்த்தும் போட்டது. நங்கூரம் பாய்ச்சுமிடத்தில் நகரத்தின் பகுதிகள் உள்வாங்கி, பெரும் பள்ளங்களும், இடிபாடுகளும் மட்டும் இருந்தன. அந்த பயங்கரமான இரவின் இருளினூடே, செய்தியாளர் ஜெனி சான்ஸ் தனது மைக்கை பிடித்திக்கொண்டு, தங்கள் வானொலிகளின் அருகிலே தவிப்போடு இருந்த மக்களுக்கு செய்திகளை வழங்கினார்: புதர்களில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு கணவர் தன் மனைவி உயிரோடிருப்பதை கேட்டறிந்தார், சாரணர் படையின் முகாமிற்கு சென்ற தங்கள் மகன்கள் நலமாயிருப்பதை அந்த கலக்கமடைந்த குடும்பத்தினர் கேட்டறிந்தனர், காணாமல் போன தங்கள் பிள்ளை மீண்டும் கிடைத்த செய்தியை அந்த தம்பதியினர் கேட்டனர், வானொலி வரிக்கு வரி நல்ல செய்திகளை இந்த அழிவின் மத்தியிலும் அறிவித்தது.

தீர்க்கதரிசி ஏசாயாவின் வார்த்தைகளை கேட்டபோது இஸ்ரவேல் ஜனங்கள் இப்படியாக தான் உணர்ந்திருப்பார்கள், அவர், "சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்" (61:1) என்றார். தரிசாய்ப்போன தங்கள் தலைகீழான வாழ்க்கையையும், இருளடைந்த எதிர்காலத்தையும் அவர்கள் வெறித்துக் கொண்டிருந்தபோது, ஏசாயாவின் தெளிவான குரல் அனைத்தும் இழந்ததுபோல தோன்றிய தருவாயில் அவர்களுக்கு நற்செய்தியை கொண்டுவந்தது. தேவன், "இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும்… நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து"(வ.1,4) இவைகளை செய்ய நோக்கமாயிருந்தார். பயங்கரத்தின் மத்தியிலே, ஜனங்கள் தேவனுடைய உறுதியளிக்கும் வாக்குத்தத்தை கேட்டனர், அது அவருடைய நற்செய்தியே.

இன்று நமக்கு, இயேசுவிலே, தேவனுடைய நற்செய்தியை கேட்கிறோம். இதுதான் சுவிசேஷம் என்ற வார்த்தைக்கு பொருள். நம் பயங்களினுடே, வலிகளினுடே, மற்றும் தோல்விகளின் மத்தியில் அவர் நற்செய்தியை வழங்குகிறார்.அதினால், நம் துன்பங்கள் விலகி சந்தோஷத்திற்கு வழிவிடும். 

குடும்பத்தின் அங்கத்தினர்

ஒரு பிரபலமான ஆங்கில தொலைக்காட்சி நாடகம், இதில் ஒரு கற்பனை குடும்பம் 1900 களின் முற்பகுதியில் இருந்த சமூக கட்டமைப்பின் வழியே பயணிப்பதை பற்றி இருந்தது. அதில் முக்கிய கதாபாத்திரம், ஆரம்பத்தில் அந்த குடும்பத்தின் பணியாளராய் வேலை செய்து, பின்னர் எல்லோருக்கும் அதிர்ச்சியூட்டும் வண்ணம் அதே குடும்பத்தின் இளையவளாக இருந்த மகளை திருமணம் செய்தார். குறிப்பிட்ட காலம் துரத்திவிடப்பட்ட அந்த தம்பதியினர், அவர்களுடைய குடும்பத்திற்கும், வீட்டுக்கும் திரும்புகின்றனர், இப்போது அந்த புது மாப்பிளை அந்த குடும்பத்தின் அங்கத்தினராக மாறுகிறார், ஒரு வேலைக்காரனாக அவருக்கு மறுக்கப்பட்ட உரிமைகளும், சலுகைகளும் இப்போது குடும்பத்தின் அங்கத்தினராக அவருக்கு கிடைக்கிறது.

நாமும் கூட,"அந்நியரும் பரதேசிகளுமாய்" (எபேசியர் 2:19) முன்னர் இருந்தோம். மேலும் தேவனுடைய குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்ட உரிமைகளுக்கு புறம்பாயிருந்தோம். ஆனால் இயேசுவால், அணைத்து விசுவாசிகளும், அவர்கள் யாராய் இருந்திருந்தாலும், தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டு "தேவனுடைய வீட்டார்" (வ.19) என அழைக்கப்படுகிறார்கள்.

தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினராக இருப்பது வியத்தகு உரிமைகளையும் சலுகைகளையும் வழங்குகிறது. நமக்கு "தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது."(3:12) அதினால் தேவனோடு அளவில்லாத, தடையில்லாத தொடர்பை நாம் அனுபவிக்கிறோம். நாம், இன்னும் பெரிய குடும்பத்தின் அங்கத்தினராய் மாறுகிறோம், நம்மை தாங்கவும், உற்சாகப்படுத்தவும் இருக்கும் விசுவாச சமூகமே அது (2:19-22). தேவகுடும்பத்தின் உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர் உதவும் சலுகை உடையவர்களாய், தேவனுடைய அளவிட முடியா அன்பை மகத்தாய் பற்றிகொள்ளமுடியும் (3:18).

பயம் அல்லது சந்தேகம் நம்மை சுலபமாக அந்நியரை போல உணரவைக்கும், மேலும் தேவனுடைய குடும்பத்தின் ஒரு அங்கமாய் மாறுவதால் உண்டாகும் பலன்களை அனுபவிப்பதில் இருந்து முற்றிலுமாய் நம்மை விலக்கி போடும். ஆனால் தேவனுடைய இலவசமும், உதாரத்துவமுமான அன்பின் வெகுமதிகளின் உண்மை தன்மைக்கு செவிகொடுத்து, மீண்டும் ஒருமுறை அதை பற்றிக் கொள்ளலாம் (2:8-10). மேலும் அவருடையவர்களாய் இருப்பதினால் உண்டாகும் பிரமிப்பில் நாம் களிகூரலாம்.

கதவை தவிர்க்கவும்

அந்த எலியின் மூக்கை ஏதோ ஒன்று சுண்டி இழுத்தது. ஏதோ ஒன்று மிக ருசிகரமான உணவு அருகிலேயே இருந்தது. திடமாக அந்த மணம், பறவைகள் உண்ணும் ருசிகரமான விதைகள் நிறைந்த தீவனத்தொட்டிக்கு நேரே இட்டுச்சென்றது. அந்த எலி சங்கிலியின் வழியே கீழே இறங்கி தீவனத்தை நோக்கி வந்தது, கதவின் இடுக்கின் உள்ளே நுழைந்து இரவெல்லாம்  தின்று கொண்டே இருந்தது. காலையில்தான் தான் சிக்கியிருந்த ஆபத்தை உணர்ந்தது. இப்பொழுது பறவைகள் அந்த தீவனத்தொட்டியின் வழியே அதை கொத்த துவங்கின. ஆனால் விதைகளை தெவிட்ட தெவிட்ட அதிகம் தின்ற காரணத்தினால், அது பெருத்துப் போய் தப்பிக்க இயலாமல் மாட்டிக்கொண்டது.

கதவுகள் நம்மை மிகவும் அற்புதமான இடங்களுக்கு நேரே நடத்தும், அல்லது ஆபத்தான இடங்களுக்கும் நடத்தும். நீதிமொழிகள் 5ல், பாலியல் சோதனைகளை தவிர்க்கும்படியான சாலமோனின் அறிவுரைகளிலும், கதவு பிரதான அம்சமாய் இருக்கிறது. பாலியல் பாவம் கவர்ந்து இழுக்கக் கூடிய ஒன்றாய் இருப்பினும், அதைப் பின்தொடர்ந்தால், ஆபத்து காத்திருக்கிறது (5:3-6) என்று அவர் கூறுகிறார். அதைவிட்டு தூரமாய் தள்ளி இருப்பதே சிறந்தது; ஏனெனில், அந்த கதவின் வழியாக நீங்கள் நடந்தால், நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள், உங்களுடைய மரியாதையை இழந்து, உங்கள் செல்வமெல்லாம் அன்னியர்களால் பிடுங்கிக் கொள்ளப்படும் (வ.7-11) மாறாக, நம்முடைய வாழ்க்கை துணைகளோடு இன்பமாய் இருப்பதையே சாலமோன் அறிவுறுத்துகிறார் (வ.15-20). அவருடைய அறிவுரை இதற்காக மட்டுமல்லாமல் மற்ற பாவங்களுக்கும் பொருந்தும். பெருந்திண்டியின் சோதனையோ, அல்லது அதிகமாக செலவழிக்கும் சோதனையோ, அல்லது வேறு எதுவாயிருந்தாலும், நாம் சிக்கிக் கொள்ளக் கூடிய கதவை தவிர்ப்பதற்கு தேவன் நமக்கு உதவுவார்.

அந்த வீட்டின் எஜமான், தனது பறவைகளின் தீவனத் தொட்டியில் சிக்கிக்கொண்ட எலியை கண்டு, அதை தனது தோட்டத்தில் விடுவிக்கும் போது, அந்த எலி மிகுந்த சந்தோஷமாய் இருந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக, தேவனுடைய கரமும் நாம் சிக்கிக்கொள்ளும் போது நம்மை விடுவிக்க ஆயத்தமாக உள்ளது. ஆனால் எல்லாவற்றிற்கும் முன்னராகவே, நாம் சிக்கிக்கொள்ளும் கதவை நாம் தவிர்க்க தேவனின் பெலத்தை கேட்டு பெற்றுக்கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விண்வெளி பந்தயம்

ஜூன் 29, 1955 இல், அமெரிக்கா செயற்கைக்கோள்களை விண்வெளியில் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. விரைவில், சோவியத் யூனியனும் அதைச் செய்வதற்கான திட்டங்களை அறிவித்தது. விண்வெளிக்கான பந்தயம் தொடங்கியது. சோவியத், முதல் செயற்கைக்கோளை (ஸ்புட்னிக்) ஏவியது மற்றும் யூரி காகரின் நமது கிரகத்தை ஒரு முறை சுற்றி வந்தபோது, முதல் மனிதனையும் விண்வெளியில் செலுத்தியது. ஜூலை 20, 1969 அன்று, நிலவின் மேற்பரப்பில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் “கால்தடம்” போட்டியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் முடிக்கும் வரை இந்த பந்தயம் நீடித்தது. இனைந்து பணியாற்றும் காலம் விரைவில் உதயமானது, இது சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்க வழிவகுத்தது.

சில நேரங்களில் போட்டி ஆரோக்கியமானதாக இருக்கலாம், அது நாம் முயற்சி செய்யாத விஷயங்களைச் சாதிக்க நம்மைத் தூண்டுகிறது. இருப்பினும், மற்ற நேரங்களில், போட்டி அழிவுகரமானது. கொரிந்துவில் உள்ள சபையில் இது ஒரு பிரச்சனையாக இருந்தது, ஏனெனில் வெவ்வேறு குழுக்கள் பல்வேறு சபை தலைவர்களை தங்கள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாகப் பற்றிக்கொண்டன. இதனைச் சமாளிக்க பவுல், “நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்” (1 கொரிந்தியர் 3:7) என்று எழுதியபோது, “நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்” (வ.9) என்று நிறைவு செய்தார்.

உடன்வேலையாட்கள்; போட்டியாளர்கள் அல்ல. மேலும் ஒருவருக்கொருவர் மட்டுமல்ல, தேவனோடும்! அவருடைய அதிகாரம் மற்றும் அவரது வழிகாட்டுதலின் மூலம், இயேசுவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல உடன்வேலையாட்களாக நாம் ஒன்றுசேர்ந்து பணியாற்றலாம், நம்முடையதை காட்டிலும் அவருடைய மகிமைக்காக. 

 

புதிதாக வாழுதல்

ஒரு பள்ளியின் சிறந்த மாணவர்கள் கல்விச் சாதனைக்கான சான்றிதழைப் பெற்றபோது கைதட்டல்கள் முழங்கின. ஆனால் அதோடு நிகழ்ச்சி முடிவடையவில்லை. அடுத்த விருது பள்ளியின் “சிறந்த” மாணவர்கள் அல்ல, மாறாக மிகவும் மேம்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர்கள் தோல்வியடைந்த பாடத்தில் முன்னேற, சீரழிக்கும் நடத்தையை மாற்றிக்கொள்ள அல்லது வகுப்புக்கு தவறாமல் வருகை தரக் கடினமாக உழைத்தவர்கள். அவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்து கைதட்டி, தங்கள் பிள்ளைகள் உயர்ந்த பாதைக்குத் திரும்பியதை ஏற்றுக்கொண்டனர். அவர்களின் முந்தைய குறைபாடுகளைப் பார்க்காமல் அவர்கள் புதிய பாதையில் நடப்பதைக் கண்டனர்.

நமது பழைய வாழ்க்கையை அல்ல, இப்போது கிறிஸ்துவில் அவருடைய பிள்ளைகளாக நம்மை நம்முடைய பரலோகத் தகப்பன் எப்படிப் பார்க்கிறார் என்பதைச் சிறிய கற்பனையாகச் சிந்திக்க வைக்கும் காட்சியாக இது அமைந்திருந்தது. “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12) என்று யோவான் எழுதினார்.

என்ன ஒரு அன்பான நோக்கம்! எனவே பவுல், “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்(தீர்கள்)த” (எபேசியர் 2:1) என்று புதிய விசுவாசிகளுக்கு நினைவூட்டினார். ஆனால் உண்மையில், “நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்” (வ.10).

இதேபோல பேதுருவும், நம்மைக்குறித்து “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” என்றும் முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்(1 பேதுரு 2:9-10) என்றும் எழுதினார். தேவனின் பார்வையில், நம்மீது நமது பழைய வாழ்க்கைக்கு அதிகாரமில்லை. தேவன் பார்ப்பது போல் நாமும் நம்மைப் பார்ப்போம், புதிய வாழ்வில் நடப்போம். 

 

மனந்திரும்பும் இருதயம்

ஒரு நண்பர் தனது திருமண உறுதிமொழியை மீறினார். அவரே தனது குடும்பத்தை அழிப்பதைப் பார்ப்பது வேதனையாக இருந்தது. அவர் தனது மனைவியுடன் சமரசம் செய்ய முயன்றபோது, என்னிடம் ஆலோசனை கேட்டார். அவர் வார்த்தைகளில் அல்ல செயல்களில் காட்ட வேண்டுமென்றும்; தனது மனைவியை நேசிப்பதிலும் பாவத்தின் எந்த வடிவத்தையும் அகற்றுவதில் முனைப்புடன் இருக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன்.

கர்த்தருடன் செய்த உடன்படிக்கையை மீறி அந்நிய தேவர்களைப் பின்பற்றியவர்களுக்கு எரேமியா தீர்க்கதரிசி இதே போன்ற ஆலோசனை வழங்கினார். அவரிடம் திரும்புவது நல்ல துவக்கமாக இருந்தாலும், அது மட்டும் போதாது (எரேமியா 4:1). அவர்கள் சொல்லோடு அவர்கள் செயல்களையும் இசைவாகச் சீரமைக்க வேண்டும். அது அவர்களின் “அருவருப்பான விக்கிரகங்களை” அகற்றுவதைக் குறிக்கிறது (வ. 1). எரேமியா, அவர்கள் “உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும்” அர்ப்பணித்தால், தேவன் தேசங்களை ஆசீர்வதிப்பார் என்றார் (வ. 2). மக்கள் வெற்று வாக்குறுதிகளை அளிப்பதுதான் பிரச்சனை. அவர்களின் இருதயம் அதிலே இல்லை.

தேவனுக்கு வெறும் வார்த்தைகள் வேண்டாம்; அவருக்கு நம் இருதயங்கள் வேண்டும். இயேசு கூறியது போல், “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” (மத்தேயு 12:34). அதனால்தான், எரேமியா தனக்குச் செவிகொடுப்பவர்களை “நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்” (எரேமியா 4:3) என்று ஊக்கப்படுத்துகிறார்.

கவலைப்படத்தக்கதாக, பலரைப் போலவே, எனது நண்பரும் சரியான வேதாகம அறிவுரைகளுக்குச் செவிசாய்க்கவில்லை, அதன் விளைவாக அவரது திருமண வாழ்வை இழந்தார். நாம் பாவம் செய்யும்போது, அதை ஒப்புக்கொண்டு அதிலிருந்து திரும்ப வேண்டும். தேவனுக்கு வெற்று வாக்குறுதிகள் வேண்டாம்; அவருடன் உண்மையிலேயே இசைந்திருக்கும் ஒரு வாழ்க்கையை விரும்புகிறார்.